Showing posts with label தாகூர். Show all posts
Showing posts with label தாகூர். Show all posts

Saturday, November 26, 2011

வங்கம் தந்த தங்கம் - 150

இந்த கட்டுரை மே மாதம் நான் எழுத நினைத்தது.ஆனால் சம்மர் ஹாலிடே
என்ற பெயரில் ஊர் சுற்றலும்,விருந்தினர்கள் வருகையும் என்று ஆகி விட்டதாலும் பின் ஏற்பட்ட கணிணி பழுதினாலும் அப்பொழுது விடுபட்டு அதன் பின் இதைப் பற்றிய நினைப்பில்லாமல் போனது.இருப்பினும் பதியாமலே விடுவதை விட தாமதமான பதிவு மேல் என்று இப்பொழுது பதிந்திருக்கிறேன்.


                              
                                                                                                                     


2011 - கவிஞர் தாகூரின் 150 ஆவது பிறந்த ஆண்டு.உலகில் எவர் எவருக்கோ
நூறும் நூற்றைம்பதும் கொண்டாடப் படுகிறது. நம் நாட்டில் இலக்கிய மறு மலர்ச்சி ஏற்படுத்திய இந்த தங்கக் கவிஞரை நாம் கொண்டாட வேண்டாமா?
அவரையும் அவரது படைப்புகளையும் பற்றி நாம் சிறிதாவது அறிய வேண்டாமா?

1861 ஆம் ஆண்டு மே மாதம் 7ம் தேதி வங்கத்தில் உதித்த இந்த தங்கம் தன் எட்டு வயதில் கவிதை எழுத ஆரம்பித்தார்.1878 ஆம் ஆண்டு அஹமதாபாதில் உள்ள
ஷாஜஹான் கட்டிய மோத்தி சாஹி மஹாலில் தனது தமையன் சத்யேந்திரனாத் தாகூருடன் ( ஐ சி எஸ் பரிட்சையில் தேறிய முதல் இந்தியர் இவர்தான்) தங்கி இருந்த போது "பசிக்கும் கற்கள்' என்ற சிறுகதை எழுதினார்.

1911 ஆம் ஆண்டு பாரத தேசிய கீதமாக விளங்கும் "ஜன் கண மண" எழுதி
இந்திய தேசிய காங்கிரஸ்ஸின் 26 ஆவது மாநாட்டில் பாடினார்.அடுத்த ஆண்டில் "கீதாஞ்சலி" என்ற பாடல் திரட்டை வெளியிட்டார்.1913 ஆம் ஆண்டு அதற்கு நோபல் பரிசு கிட்டியது.1915 ஆம் ஆண்டில் ஆங்கில அரசு அவருக்கு 'சர்' பட்டம் வழங்கியது

இவர் தனது கோட்பாடுகளின் படி தனது பாடல்களில் இறைவனுக்கு பெயர் கொடுக்கவில்லை.அதற்கு காரணமாக இவர் கூறிய கருத்து, "நாம் காணும் உணரும் உலகின் வழியாக இறையை வழிபடுவதே சிறந்ததாகும்.பிரபஞ்சத்தின் வெளித் தோற்றங்களில் காணும் இன்பமே இறை வழிபாடு. "ஈசாவாஸ்யம் இதம் சர்வம்" (கேனோபனிஷத்) இவையனைத்தும் இறைவன்"  என்பதாகும்.

"மனிதனே உயர்ந்த சத்தியம்" என்பதையே தனது மதமாகக் கொண்டார்.
"கோயிலின் இருண்ட மூலையில் கதவுகளைச் சாத்திக் கொண்டு யாரை வழிபடுகிறீர்கள்?கண் மூடி ஜப மாலை உருட்டுவதை விடுத்து கண்களைத் திறந்து பாருங்கள்.கடவுள் அங்கே பாதை போடுபவனிடத்திலும்,வயலில் உழுபவனிடமும் இருக்கிறான்.மழையிலும் வெயிலிலும் அவர்களோடு இருக்கிறான்.அவர்களது உழைப்பிலும் வியர்வையிலும் கடவுளைக் காணுங்கள்" என்றார்.

கீதாஞ்சலியின் இறுதிப் பாடலில்,

"ஓடுகின்ற ஓர் கணத்தில்
ஓங்குகின்ற ஊழியில்
ஆடுகின்ற பகலில்
அந்தகாரம் சூழும் இரவில்
வருகிறான் வருகிறான் வருகிறான்"  என்று பாடியுள்ளார்.

"வீடு திரும்பும் ஆர்வத்தோடு இரவு பகலாக தங்கள் மலைக்கூடுகளுக்கு
பறக்கும் நாரைகள் போல் என் முழு வாழ்வும் உனக்கொரு வணக்கமாக என் நித்யமான வீட்டுக்கு பயணமாகட்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அருமையான கவிதைகள் தந்த இந்த தங்கம் கவிதையோடு நிற்காமல் நாடகங்கள்,சிறுகதைகள், இலக்கிய விமர்சனங்கள் என்று எந்த இலக்கிய வடிவையும் விட்டு வைக்காமல் எழுதியுள்ளார்.

"கதா ஓ கஹினி,கொல்ப குச்சா,கதா சதுஷ்டை,கொல்ப தாஸ்தக் என்ற தொகுப்புகள் வெளியிட்டார்.ஆங்கிலத்தில் "The postmaster,The child's return,The
kabuliwala போன்றவையும் தந்தார்.
வீடும் வெளியும்,இரு சகோதரிகள், நாலு அத்தியாயங்கள் என்ற நவீன சமூக நாவல்களை அளித்தார்.இவரது சமூக நாவலகள் பல திரைப்படங்களாகவும் வந்துள்ளன.தம் இறுதி நாட்களில் ஓவியம் தீட்டக் கற்றுக் கொண்டு பல சித்திரங்கள் வரைந்துள்ளார்.கல்கத்தாவில் ரவீந்திர சதன் நிலத்தடி ரயில் நிலையத்தில் அவரது பல ஓவியங்கள் பார்வைக்கு வைக்கப் பட்டுள்ளது.

இவரது படைப்புகளில் சிறு பகுதிதான் தமிழில் வெளி வந்துள்ளது.தமிழாக்கம் செய்யப் படவேண்டியவை ஏராளமாக உள்ளது.வரகவி பாரதி இவரது கவிதைகள்,கதைகள்,கட்டுரைகளை மொழி பெயர்த்துள்ளார்.ஆனால் அவர் செய்த தமிழாக்கம் வங்க மூலத்திலிருந்து அல்ல.ஆங்கிலத்திலிருந்துதான்.
பத்திரிக்கையில் வெளியான தாகூரது ஆங்கில கட்டுரைகள் ஐந்தை 'பஞ்ச வியாசங்கள்' என்ற தலைப்பில் தனி நூலாக பாரதியார் வெளியிட்டார்.'அடங்கி நட, ஜாதி, கல்வி கற்பிக்கும் பாஷை, சிறிதும் பெரிதும்"  என்பன போன்ற எட்டு
சிறுகதைகளை தமிழ்க் கவி மொழி பெயர்த்தார். பாரதியாரின் நண்பர் ஸ்ரீனிவாசாச்சாரியாரால் இவை ஒரே தொகுப்பு நூலாக வெளியிடப்பட்டது.

வங்க மூலத்திலிருந்து நேரடியாக தமிழாக்கம் செய்தவர்களுள் முதன்மையானவர் த.நா.குமாரஸ்வாமி அவர்கள்.சுமார் 50 ஆண்டுகள் இவரது
மொழிபெயர்ப்பு பணி தொடர்ந்தது.இவர் மொழி பெயர்த்த பல வங்க மூலங்களில் 26 தாகூரின் படைப்பாகும்.இவற்றை வெளியிட்ட பெருமை
அல்லயன்ஸ் கம்பெனிக்கும்,கலைமகள் காரியாலத்திற்கும், சாகித்ய அகாடமிக்கும் சேரும்.
தாகூரின் நூற்றாண்டு விழாவையொட்டி இரண்டு சிறுகதைத் தொகுதிகள்,101 கவிதைத் தொகுதிகள் மற்றும் கட்டுரைத் தொகுதிகள் வெளியிடப் பட்டன.
த நா குமாரஸ்வாமி அவர்களின் சகோதரர் த நா சேனாபதியும் சில தமிழாக்கம் செய்துள்ளார்.

'கவியரசர் கண்ட கவிதை' என்று தாகூரின் 120 வங்கப் பாடல்கள் பேராசியர்
ஆ.ஸ்ரீனிவாச ராகவன் அவர்களால் மொழியாக்கம் செய்யப் பட்டுள்ளது.

இந்திய இலக்கிய மறுமலர்ச்சியின் பங்கிற்கு ஒரு வித்தாக இருந்த தங்கக் கவிஞரை நாம் அடைந்ததற்காக பெருமை கொள்வோம்.